Tuesday, February 21, 2012

அந்தமான் தீவு ஜாறாவா பழங்குடி மக்கள்




ஜாறாவா என்னும் இந்தி சொல்லுக்குப் பொருள் ‘அந்நியர்கள்’ என்றுபொருள். இந்தியப் பெருநாட்டின் அதிகாரத்தின்கீழ் இருக்கும் மூன்றரை இலட்சம் மக்கள் வாழும் தீவுகள் அந்தமான் - நிக்கோபார் தீவுகள். மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுநகரங்களில் வாழ்கிறார்கள். இரு பங்கினர் கடலோரங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் குடியேறியவர்களே. அந்தத்தீவின் ஆதிக்குடிகள் நூற்றுக்கணக்கில்தான் இன்றும் வாழ்கின்றன. இந்தத் தீவில் சுமார் 250 -300 பேர் ஜாறாவா மக்கள் இவர்களை இந்திய அரசு திட்டமிட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான நவீனக் காட்சி சாலையாகக் கட்டமைத்துள்ளது. இந்தத் தீவிற்கு செல்லும் மக்கள் இவர்களைப் பார்ப்பது பற்றியே பேசிக்கொள்கிறார்கள். இந்தத் தீவில் இருக்கும் மிக அழகான கடற்கரைகள் (பீச்) பற்றியோ, அரிய காடுகளில் வாழும் பறவைகள் பற்றியோ பேசுவதில்லை. மிருகங்களைப்போல் வாழும் ஜாறாவா மக்களைப் பார்ப்பதில், அந்த நிலையைக் கடந்த மனிதர்களுக்கு ஆசை. மனிதனை மனிதன் மிருகமாகக் காணும் இந்தக் காட்சியின் பின்னுள்ள மனநிலையை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது.

- காடுகளில் ஆதிக்குடிகளாக வாழ்ந்தவர்கள் இப்போது அந்தமான் நெடுஞ்சாலை (சுமார் 50கி.மீ.) யில் பிச்சை எடுப்பது ஏன்?

- ஆதிக் குடிகள் பிறமக்களிடம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளை அரசாங்கம் எப்படிப் பேணுவது?

- ஆதிக் குடிகளின் அடிப்படை உரிமைகளைப்பேணுவது எப்படி?

இவ்வகையான கேள்விகள், அந்தமான் தெற்குத்தீவுப் பகுதிகளில் வாழும் ஜாறாவா மக்களைக் காணும் கணங்களில், பெரும் சுமையாக நம் மனதில் கனக்கிறது. மனித உரிமை, மனிதாபிமானம் என்றெல்லாம் வாய்கிழியப் பீற்றிக் கொள்கிறோம். ஆனால் ஜாறாவா மக்களைக் காட்சிப் பொருளாக்கி, சுற்றுலா நடத்தும் அரச அதிகாரத்தின் கோர முகத்தைப் அம்பலப்படுத்துவதில் நாம் என்ன செய்கிறோம்?.

உலகில் வாழும் நூற்றுக்கணக்கான ஆதிக்குடிகளில் ஒன்று ஜாறாவா இனம். இவர்கள் வாழ்ந்த இடங்கள் தனித்திருந்தன. தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த ஐரோப்பியர்கள், இவ்வகையான தீவுகளையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்தனர். அந்தமான் தீவில் விடுதலைப்போர் கைதிகளை அடைக்கும் செல்லுலார் சிறைகளைக் கட்டி, நூற்றுக்கணக்கில் போராளிகளை அடைத்தனர். இதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடங்கி நடைமுறைப்படுத்தினர். இவ்வகையான செயல்பாடுகள், இந்தத் தீவுகளில் வெளிமனிதர்கள் அதிக அளவில் குடியேற வழிகண்டது. இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின்கீழ் இத்தீவுகள் வந்தபின், கப்பல் போக்குவரத்து குறிப்பாகக் கடற்படைக் கப்பல்களைப் பராமரிக்கும் தீவுகளாக இன்று மாற்றப்பட்டுள்ளன.

போர்ட்பிளேர் முழுவதும் கடற்படையினர் விட்டுவிட்ட எஞ்சிய பகுதிகளில் மக்கள் வாழ்கிறார்கள். இவ்வகையில் இந்திய அரசு 1978-இல் தெற்கு அந்தமான் பகுதியை வடக்கு அந்தமான் பகுதியோடு இணைக்கும் தரைவழி நெடுஞ்சாலை ஒன்றைப் போடத்தொடங்கியன. ஜாறாவா மக்கள் வாழும் காட்டுப்பகுதியில் போடப்பட்ட இச்சாலை அந்தமான் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படுகின்றது. 1988இல் இச்சாலை சுமார் 50 கி.மீ. நீளமுள்ள மலைக்காட்டுப் பகுதியில் போட்டு முடிக்கப்பட்டது. இச்சாலை உருவாக்கத்தின்போது ஜாறாவா மக்கள் பலர் கொல்லப்பட்டனர். சாலைப் பணியாளர்களும் சிலர் ஜாறாவா மக்களால் கொலை செய்யப்பட்டனர். இத்தகவல்கள் எல்லாம் வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது. இந்தச் சாலை போடப்பட்டுப்பத்து ஆண்டுகள் (1998) வரை, பிற மனிதர்களோடு தொடர்புகொள்வதை ஜாறாவா மக்கள் விரும்பவில்லை. காடுகளில் வேட்டையாடி வாழ்ந்து வந்தனர். 1998 முதல் படிப்படியாக நெடுஞ்சாலைகளுக்கு வரத் தொடங்கினர். சாலையில் செல்வோர் தூக்கி எறியும் பொருட்களை எடுக்கத் தொடங்கினர். தங்களது பாரம்பரிய வேட்டைத் தொழிலைப் படிப்படியாக இழக்கத் தொடங்கி, சாலையில் கையேந்தி நிற்கும் மக்களாக மாறியுள்ளனர்.

“நெடுஞ்சாலையில் வாகனங்களை மிகவேகமாக ஓட்ட வேண்டும், ஆதிக்குடிகளுக்கு இலவசங்கள் எதுவும் கொடுக்கக்கூடாது” என்றெல்லாம் கொட்டை எழுத்தில் எழுதி வைத்துள்ளனர். ‘புகைப்படம் எடுக்கக் கூடாது’ என்றும் எழுதியுள்ளனர். ஆனால், எதார்த்தத்தில் இவை எதுவும் நடைமுறையில் இல்லை. அந்த மக்களே வாகனங்களை நிறுத்திக் கையேந்துகிறார்கள். பெரும்பான்மையாக நிர்வாணமாக வாழும் அம்மக்களை, தங்களது புகைப்படக் கருவிகளில் ‘நாகரிக’ மனிதர்கள் காட்சிப்பொருளாகப் பதிவு செய்கிறார்கள். இவர்களை இவ்விதம் பிச்சைக்காரர்களாக மாற்றியது அவர்கள் வாழுமிடத்தில் உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைதான். நீர்வழிப் பாதைகளைத் தவிர்த்து, தரைவழிப் பாதையை உருவாக்கியதன் மூலம், ஆதிக்குடிகள் வாழுமிடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பணியை இந்திய அரசு செய்தது. கடந்த 15 ஆண்டுகளில், வெளிமனிதர்களிடம் ஆதிக்குடிகள் தொடர்பு கொண்டதால் அவர்களது பாரம்பரிய வாழ்முறையை இழந்தனர். இதன்மூலம் அவர்கள் பெற்றிருப்பது பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை. ஆதிக்குடிகள், வெளிமனிதர்களிடம் தொடர்புகொள்வது என்பது இவ்வகையில்தான் அமைய வேண்டுமா? அம்மக்களை வன்முறையாளர்களாக நம் மனதில் கட்டமைத்துள்ளார். நாகரிக வளர்ச்சி பெறாத அம்மக்களை வன்முறையாளர்களாக, பிச்சை எடுத்து வாழ்பவர்களாக, மாற்றியதில் இந்திய அரசாங்கத்தின் பங்கு முதன்மையானது. இதனை எதிர்த்து, அரசு சாரா (என்.ஜி.ஓ) அமைப்புகள் சில பொதுநல வழக்குகளை நீதிமன்றங்களில் போட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் கடமை நமக்குண்டு.

வழக்குளின் விளைவாக ‘ஆதிக்குடிகளைப் பாதுகாக்கும் படை’ ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. இக்காவல்துறைதான் அம்மக்களை, துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்முறை போன்ற செயல்களைச் செய்து வருவதில் முன்னிடம் வகிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜாறாவா இளைஞர்களை அழைத்துக் கொண்டு, இந்தக் காவல்படை ஆங்காங்குச் செல்வதைக் காணமுடிகிறது. சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்டுவதற்காக, காடுகளில் வாழும் மக்களை இவர்கள் சாலைக்கு அழைத்து வருகிறார்களோ என்றும் கருதவேண்டியுள்ளது. ஆக, அரசு அம்மக்களைச் சுயமரியாதையோடு வாழ்வதற்கு எந்த வகையிலும் உதவவில்லை; மாறாக, சுற்றுலா மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க மறைமுகமாக உதவுகிறது. அந்தமானில் உள்ள சுற்றுலா வணிகத் தரகர்கள், இம்மக்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி ஏமாற்றுகிறார்கள். ‘நோய் எதிர்ப்புச் சக்தி’ மிகக்குறைவாக உள்ள அம்மக்களுக்குப் பல்வேறு நோய்களையும் வெளிமனிதர்கள் கொடுக்கிறார்கள். ‘பான் பராக்’ போன்ற போதைப் பொருட்களையும் சாலையில் எறிகிறார்கள். அதனை அந்த மக்கள் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இவ்வகையில் அப்பாவிப் பழங்குடிகளைக் கொடுமைப்படுத்தும் இச்செயலுக்கு முடிவுதான் என்ன?

ஆதிக்குடிகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அவர்களது வாழ்விடங்களைப் பறிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அம்மக்களை, இப்பொழுது வாழும் ‘நெடுஞ்சாலைப் பிச்சைகாரர்கள்’ எனும் நிலையை மாற்றி, அவர்களது பாரம்பரிய வேட்டை வாழ்விற்கான வழிகளை உருவாக்கித் தர வேண்டும். அந்த மக்கள் வெளிமனிதர்களோடு தொடர்புகொள்ள விரும்பும் சூழல் ஏற்படும் தருணத்தில், அதற்கான வழிகளைச் செய்துதர வேண்டும். சாதாரண குடிமைச் சமூக மனிதர்களாக அவர்கள் வாழ்வதற்கான திட்டங்களை உருவாக்கி, அவர்கள் வாழ்க்கைச் சூழலைக் காக்கும் மனிதாயப்பணி நம்முன் உள்ளது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் கொடுமையை விட கோரமானது; மனிதனை மனிதன் மிருகமாக வாழ நிர்பந்திப்பது.

அந்தமானில் தமிழர்


பர்மாவில் உள்ள அராகன் மலையில் இருந்து தெற்கு நோக்கிச் சுமத்திரா தீவுவரை நீண்ட நெடிய மலைத்தொடரின் தொடர்ச்சி கடலில் மூழ்கிப் போனது. எஞ்சிய சிகரங்களே இன்றைய அந்தமான் - நிக்கோபார் தீவுகள் ஆகும். சிறிதும் பெரிதுமாக 567 தீவுகள் இன்றும் உள்ளன. இந்தியாவின் தென்கோடி முனை குமரியல்ல; இந்தியாவிற்குத் தூரக் கிழக்கில், நிக்கோபார்த் தீவுக்கும் தெற்கே உள்ளது. இப்பகுதி நிலநடுக்கோட்டிற்கு வடக்கே உள்ளது. இதன் பெயர் பிக்மலியன் பாயின்ட் இது அண்மையில் 'இந்திரா முனை' என நடுவணரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையர், சென்னையிலிருந்து 1191 கடல் மைல் தூரத்திலும், கல்கத்தாவிலிருந்து 1255 கடல் மைல் தூரத்திலும் இருக்கின்றது. 1945 இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அந்தமான் முதலிய தீவுகள் 1-11-1956 முதல் நடுவணரசின் நேரடி மாநிலமாயின.

தமிழர் குடியேறிய வரலாறு

தீவுமக்களும் தமிழரும் :

அந்தமான் தீவில் ஆப்ரிக்கரைப் போன்ற கருப்பு நில பழங்குடிகள் வாழ்கின்றனர். இம்மக்கள் 'நீக்ரிடோ' இனத்தவர். இவர்களின் ஊர்ப் பெயர், பழக்க வழக்கங்கள், பயன்படுத்தும் பொருள், மொழியின் வேர்ச்சொல் ஆகியவை தமிழோடு ஒத்துப் போகின்றன. இவர்களைப் போலவே நிகோபார் தீவுகளில் மங்கோலியன் கலப்பு இன மஞ்சள் நிறப் பழங்குடியினராக நிகோபாரிகள் வாழ்கின்றனர். நிகோபாரி மொழியில் தமிழைப் போல் 'ழ' கரம் பயன்படுத்தப்படுவதோடு, குடுமி வளர்த்தல் மற்றும் மங்கோலியரோடு ஒத்துப் போகாத தமிழரோடு இணைந்த குடும்ப வாழ்க்கையும், பழக்க வழக்கங்களும் உண்டு.

பெரிய நிகோபாரில் உள்ள 'சாம்பன்' பழங்குடியினரைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் இப்படி எழுதியுள்ளார். "இந்த இன மக்கள் வாழும் காட்டுப் பகுதியில் ஒரு தமிழனைச் சந்தித்தால் 'சாம்பன்' பழங்குடியினரில் இருந்து என்னால் வேறு படுத்திக் காண முடியாது"என்கிறார். இந்த அடிப்படையில் பழங்காலந்தொட்டே தமிழனுக்கு அந்தமானோடு தொடர்பு இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

'அந்தமான்' என்ற பெயரே தமிழர் கொடுத்ததுதான். மான்கள் நிறைந்திருந்த காரணத்தால் இப்பெயரால் அழைத்தனர். சோழர்களின் ஆட்சியில் தென்கிழக்காசியா முழுவதும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது வரலாறு. சோழனின் கடற்படை இன்றைய நிக்கோபாரில் இருந்ததாம். இதற்கான ஆதாரத்தை தஞ்சைக் கோயில் கல்வெட்டில் இன்றும் காணலாம். நிக்கோபாருக்குத் தமிழர்கள் வைத்தபெயர் : 'நக்கவரம்' என்பது. அக்காலத்தில் அத்தீவில் இருந்த மக்கள் நிர்வாணமாக இருந்ததால் இப்பெயர் வைக்கப்பட்டது என்கின்றனர்.

கார் நிகோபாரை 'கார்தீவிபா' என்றும் கிரேட் நிகோபாரை 'நாகதீவிபா' என்றும் சோழர்கால சமஸ்கிருத கல்வெட்டு கூறுகிறது. மார்கோபோலோ வரவால் இத்தீவின் பெயர் 'நெக்குவரம்' என்று மாறிவிட்டது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை'யில் வரும் சாதுவன் என்ற வணிகன் இத்தீவில் தான் மாட்டிக்கொண்டான் என்கின்றனர். 'நக்க சாரணர் நாகர்வாழ்மலை' என்று குறிப்பிடும் பகுதி இஃதே எனச் சொல்லலாம்.

இரண்டாம் கட்ட குடியேற்றம் :

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இத்தீவின் முக்கியத்துவத்தை உணர்ந்து படைகளை நிறுத்தி இருந்தனர். பின்னர் அரசியல் கைதிகளை வாழ்நாள் தண்டணை தந்து இங்கு குடியேற்றினர்.
சிறைச்சாலைக் கட்ட சென்னையிலிருந்து பல தமிழர் குடியேறினர். அரசியல் கைதிகளைத் தவிர மற்ற குற்றவாளிகளும் குடியேறினர்.

அரசியல் கைதிக்கு அடுத்து, வணிகர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பெருமளவில் குடியேறினர். அரசியல் கைதிகளில் வங்காளிகளும், மாப்பிளா கலகத்தின்
போது போராடிய 1400 மலையாளிகளும் பெருமளவில் குடியேறியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 1971-ஆம் ஆண்டு மொழிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வங்காளிகள் முதலிடம், தமிழர் இரண்டாம் இடம். இன்று 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

567 தீவுக் கூட்டத்தில் இதுவரை மக்கள் குடியேறியிருப்பவை 38 மட்டுமே. மற்றவை அனைத்தும் மனிதவாசனை அற்ற தீவுகளே ஆகும். 1943-இல் ஜப்பானியர் இந்தத் தீவுகளை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றி 1945 வரை மூன்றாண்டுகள் வைத்திருந்தனர். பின்னர் இத்தீவை நேதாஜி சுபாஷ் சந்திர போசிடம் விட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திரப் பிரகடனமும், மூவண்ணக் கொடியும் இங்கேதான் ஏற்றப்பட்டது. முதல் ஆளுனராக நேதாஜியால் நியமிக்கப்பட்டவர் டாக்டர். கர்னல் லோகநாதன் என்ற தமிழர் ஆவார்.

தமிழரின் இன்றைய நிலை

சமயம் :

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் செல்வாக்கே எங்கும் இருந்தது. அவர்களின் தலைமையிடமாக 'ராஸ்' என்ற சின்னஞ் சிறியத் தீவு விளங்கியது. இங்குதான் கிருஸ்த்துவ தேவாலயம் இருந்தது. அது தவிர்த்து அனுமதிக்கப்பட்ட ஒரே கோவில் தமிழர்கள் கட்டிய முருகன் கோயில்தான்!

தலைநகர் போர்ட் பிளையரின் வெற்றிமலை முருகன் கோயிலை இங்குள்ள மக்கள் அந்தமானின் திருப்பதி என்கிறார்கள். இதே போல போற்றப்படும் மற்றொரு கோயில் அலைகடல் அய்யனார் கோயிலாகும். தீவெங்கும் முருகன், வினாயகர், மாரியம்மன் ஆலயங்களைக் கட்டி, அவை தொடர்பான விழாக்களை நடத்தி, தமிழர் பண்பாட்டினைக் காப்பாற்றுகின்றனர். காதணிவிழா, திருமணம் போன்றவை இக்கோயில்களில் நடப்பதுண்டு. இங்கு விழாக்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தாம் நடத்தப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம் முதலியவை முக்கிய விழாக்களாகும்.

உணவு :

வங்காளிகள் அதிகம் என்பதால் இனிப்பு வகைகள் சந்தைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தமிழர்களின் மரபான இட்லி, தோசை, வடைக்கும் மக்களிடம் பேராதரவு உண்டு.

உடை :

பேண்ட்-சட்டைகளையே எல்லோரும் அணிகின்றனர். இதுவே தேசிய உடையாகக் காணப்படுகிறது. பெண்கள் சேலை, ஜாக்கெட், பாவாடைகள் அணிகின்றனர்.

பிறபழக்கவழக்கங்கள் :

பெண்கள் தலையில் பூச்சூடுவதும், நெற்றியில் திருநீறும், குங்குமமும் இடுவதிலிருந்தும் தமிழர் என்பதை இனம் காணலாம். நாள்தோறும் சாணிதெளித்து கோலமிடும் வழக்கத்தைத் தமிழர் இங்கு விட்டுவிட்டனர்.

ஊர் பெயர் :

தமிழர்கள் வாழும் ஊர்களுக்கு வள்ளுவர்நகர், இராமச்சந்திரபுரம், புதுமதுரை எனப்பெயரிட்டுள்ளனர்.

தகவல்தொடர்பு சாதனங்கள் :

'அந்தமான் முரசு' என்கிற இதழ் 18 ஆண்டுகளாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர் சுப. சுப்பிரமணியன் ஆவார். இன்று வேறு எட்டு கிழமை இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றுள் சில கட்சி இதழ்கள் என்றாலும் பிறமொழிகளில் இந்தளவு இதழ்கள் ஏதும் வெளி வரவில்லை. வேறு மொழியினர் கணிசமான அளவு வாழ்ந்தாலும் யாரும் தமது தாய்மொழியில் இதழ்கள் வெளியிடமுன் வருவதில்லை. அதே நேரத்தில் தமிழில் மட்டும் இத்தனை இதழ்கள் எப்படி வெளி வருகின்றன என மற்றவர்கள் வியப்படைகிறார்கள்.
அந்தமானிலுள்ள 12 அச்சகங்களில் பத்து அச்சகங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மொழி தமிழ் மட்டுமே. இங்கே பத்திரிக்கைகள் 10 நாளைக்கொருமுறை கப்பல் மூலமும் வாரத்தில் மூன்று நாள் விமானத்தின் மூலமும் வருகின்றன. தமிழகத்திலிருந்து வெளிவரும்
இதழ்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

திரைப்படங்கள் :

தமிழகத்திலிருந்து வரும் திரைப்படங்கள் தீவில் உள்ள 4 திரை அரங்குகளிலும் திரையிடப்படுகின்றன. இங்கு ரசிகர் மன்றங்களும் உண்டு.

தமிழ் மொழியின் நிலை

அந்தமானில் - வங்காளியர், பஞ்சாபியர், தமிழர், மலையாளிகள், தெலுங்கர் போன்ற பல மொழிபேசும் மக்கள் இருந்தாலும் 'இந்தி'யே ஆட்சிமொழியாக இருக்கிறது. அந்தமான் தமிழர்பற்றி இதுவரை முழுமையான நூல் ஒன்று கூட வெளிவரவில்லை.

கல்வி :

தீவின் மொத்த மக்களில் இரண்டாம் இடத்தில் தமிழர்கள் இருந்தாலும் 'தமிழ்க்கல்வி' தருவதில் மத்திய அரசு தயக்கமே காட்டி வந்தது. தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வி கொடுக்காமல் இந்திபேசும் இந்தியர்களாக ஆக்கிவிட வேண்டும் என்பதே அப்போதைய நிலை.
தமிழ்க் கல்விப் பிரச்சினைப் பற்றி அந்தமான் தலைமைக் கமிஷனராக அப்போதிருந்த ஹர்மந்தர்சிங் சொல்கிறார் :
"இந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளே உயர்நிலைப் பள்ளியில் போதனா மொழிகளாக இருந்தன. வங்காளிகள் நெருக்குதல் கொடுத்தார்கள்.

பிறகு அதுவும் போதனா மொழியாக்கப்பட்டது. இப்போது தமிழ்மொழி மீடியம் வேண்டும் என்று நெருக்குதல் தர ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஓர் இருவழிப்பிரச்சினை. இந்தப் பிரச்சினையைக் கிளப்புவோர் உள்ளூர்த் தமிழர்கள் அல்லர். அவர்கள் இந்திமொழியைச் சிரமமின்றி ஏற்றுக் கொண்டவர்கள். இந்திப்படிப்பவர்கள். மெயின்லாண்டுக்குப் போக வர இருப்பவர்கள்தான் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்" என்று மொழிந்திருப்பதிலிருந்து அன்றையப் போக்கை உணர்ந்து கொள்ளலாம்.

அந்தமான்-நிக்கோபார் கல்வித் துறையின் மதிப்பீட்டின்படி ஆறாயிரம் தமிழ்க் குழந்தைகள் மும்மொழித் திட்ட ரீதியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 33 பள்ளிகளில் கல்வி
பயின்று வருகிறார்கள். இங்கே மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை முடித்த பலர் உயர்க்கல்வி பயில தமிழகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழில் கல்லூரிக்கல்வியோ, பல்கலைக்கழக வசதியோ அந்தமானில் இல்லை.

அமைப்புக்கள் :

1. அந்தமான் தமிழர் சங்கம் போர்ட் பிளேயர்
2. தமிழர் சங்கம், மாயா பந்தர், டிக்லிபூர், லிட்டில் அந்தமான்
3. தமிழ்க் கல்விப் பாதுகாப்புக்குழு, போர்ட் பிளேயர்
4. அநிகார் தமிழ் எழுத்தாளர் பேரவை, போர்ட் பிளேயர்
5. கலை இலக்கிய மன்றம், விவேகானந்தபுரம்
6. தமிழ் இலக்கிய மன்றம், போர்ட் பிளேயர்
7. முத்தமிழ் இலக்கிய மன்றம், இரங்கத்

அந்தமான் தமிழர் சங்கம், தமிழ் இலக்கிய மன்றம் போன்ற அமைப்புகள் தமிழர்களின் இலக்கியப் பசியைக் களைவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. இதே போல ரெங்கத், மாயாபந்தர், டிக்லிட்பூர், கேமல் பே, கச்சால், வெம்பாலிர்கஞ் போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இனரீதியான மக்களை ஒருங்கிணைக்கவும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் பணியாற்றுகின்றன.

தமிழ் இலக்கிய விழாக்கள் நடத்துவதில் தமிழ் இலக்கிய மன்றத்தின் பணி குறிப்பிடத்தக்கதாகும். பாரதி-பாரதிதாசன் விழா, தமிழ்ப்புத்தாண்டு, முத்தமிழ்விழா, புலவர் விழா, சிலப்பதிகார விழா எனப் பல விழாக்களை அது நடத்தி வழிகாட்டியுள்ளது. இவ்விழாக்களில் குன்றக்குடி அடிகளார், பாவலர் பெருஞ்சித்திரனார், க.ப. அறவாணன், அவ்வை நடராசன், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் வளனரசு, டாக்டர். ந. சஞ்žவி போன்றோர் பங்கெடுத்துக் கொண்டு தீவு மக்களுக்கு இலக்கியச் சமய விருந்தளித்திருக்கிறார்கள்.

தமிழர் சாதனைகள்

இரண்டு தீக்குச்சி தயாரிக்கும் மர ஆலைகளைத் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். 4 திரையரங்குகளில் 2 தமிழர்களுடையது. இது தவிர வர்த்தக சங்கத் தலைவராக கந்தசாமி இருந்துள்ளார். இவரின் தந்தை கன்னியப்ப முதலியார் 1920-இல் மிடில் அந்தமானில் வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார். கந்தசாமி 'லாங் ஜலண்டில்' அண்ணாவுக்குச் சிலை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். கே.ஆர். கணேஷ் அந்தமான் எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். க. கந்தசாமி இன்று மக்கள் கட்சி தலைவராகவும், பிரதேசக்கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார். பெரும் வணிகராக லிங்கவேல் இருக்கிறார்.

"தீவின் 44 ஊராட்சி மன்றங்களில் ஒரு தமிழர் மட்டுமே தலைவராக இருக்கிறார். போர்ட் பிளேயர் நகராட்சியில் 11 உறுப்பினர்களில் தமிழர் மூவர். ஒருவர் நியமன உறுப்பினர். இதுபோல முப்பதுபேர் கொண்ட பரிந்துரை மன்றத்தில் ஒரே ஒரு தமிழர் மட்டுமே உறுப்பினராகவும் பரிந்துரைஞராகவும் இருக்கிறார்" என்று சுப. சுப்பிரமணியம் 94-ம் ஆண்டு நிலவரத்தை விளக்குகிறார்.

94-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலவரத்தை பத்திரிக்கையாளர் முகவை முத்து விளக்குகிறார்: இப்போதைய நிலைப்படி போர்ட் பிளேயர் நகராட்சித் தலைவர் தமிழர். அமைச்சர் அந்தஸ்தில்
அதுகூட முதலமைச்சர் அந்தஸ்தில் தமிழர். மிகப்பெரிய அதிகாரிகளாக-மாவட்ட ஆட்சித் தலைவராகக் கூட தமிழர்.

பத்திரிக்கை ஆசிரியராக - ஆளுங்கட்சிக்காரராக தமிழர். பெரிய பெரிய வணிகராக தொழிலதிபராக தமிழர். சற்றேறக் குறைய தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இங்கே உண்டு. அந்தமான் தீவில் முதன்முதலாக கட்சிக் கொடிகட்டி அரசியல் கூட்டம் போட்டவன் தமிழன்தான். முதன் முதலாகப் போராட்ட நடத்தியவன் தமிழன் தான். முதல் துப்பாக்கிச் சூட்டுக்கு மூன்று பே உயிரை தியாகம் செய்தவனும் தமிழன். சரித்திரப் பிரசித்திப் பெற்ற செல்லுலார் சிறைச் சாலையில் (சுதந்திர இந்தியாவில்) முத முதல் சிறைவாசம் அனுபவித்த அரசியல் கைதி தமிழன்" என்கிறார்.

வணிகம்/தொழில் புரிவோர் விவரங்கள் :

தீவில் முன்பு குடியேறியவர்கள் அரசு ஊழியம் தேடிக் கொண்டவர்கள். இப்போதெல்லாம் பெரும்பாலும் தனியார் துறையில் தினக் கூலிகளாகவே பணியாற்றுகின்றனர். ஆனால் நல்ல ஊதியம் கிடைக்கிறது. 1970க்கு முன் தீவின் முக்கிய பொறுப்புக்களான வனத்துறை, கப்பல் போக்குவரத்து, காவல்துறை, நீதித்துறை, டாக்டர்கள் என பல பெரிய பொறுப்புகளைத் தமிழர்கள் வகித்தனர். இன்று எல்லா இடங்களிலும் வங்காளிகளும், வடஇந்தியருமே உள்ளனர். இருந்தபோதிலும் தீவின் பெரியதும் சிறியதுமான ஐம்பது விழுக்காட்டு வணிகத்தை தமிழர்களே செய்து வருவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே இருக்கிறது.

தமிழர்படும் இன்னல்கள் :

தமிழர்கள் தென் அந்தமானிலும், போர்ட் பிளையரிலும் பெருந்தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழரின் தொகையைச் சிதரடிப்பதற்கும் பெரும் முயற்சி நடந்து வருகிறது. கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்காளிகளின் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வட இந்தியர் ஒப்புவதில்லை. 567 தீவுகளில் 38-இல் மட்டுமே மக்கள் குடியேறியுள்ளனர். மற்றவை காடாகவே இருக்கின்றன. மெல்ல, மெல்ல வங்காளியர் தொகை மட்டும் கூடிக்கொண்டே போகிறது.

தெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும், விளை நிலங்களையும் வங்காளியர் சூறையாடி வருகின்றனர். சூறாவளிப்புயல் மழையில் தமிழர்களின் குடியிறுப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. மீண்டும் தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது அவர் சொன்னபதில்:
"உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்" என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப்படுகிறது. ஆளுனரின் நிலையே இது வென்றால் மற்ற பொதுமக்கள் எப்படி இருப்பார்கள்?

தமிழரை இந்திக்காரன் 'ஐயாலோக்' (ஐயா என்று சொல்பவர்); 'கட்டாபானிவாலா' (ரசம் குடிப்பவன்) என்றும் 'ஹே ராவன்' என்றுதான் அழைப்பார்கள். இதுதான் வட இந்தியரின் மன நிலையாக இருக்கிறது.

இருந்த காலம்

கொஞ்ச நாட்களாக
அப்பாவுடன் அதிகம்
பேசிக் கொண்டிருக்கிறேன்
அப்பா இறந்து
வருடங்களாயிற்று
மனைவி கவனித்து
மருத்துவரிடம் போகலாமா
என்கிறாள் கவலையுடன்

உயிரோடிருந்த போது
அப்பாவும் நானும்
ஒருவருடம் முழுக்க
ஒரே வீட்டில் இருந்து கொண்டு
பேசாமல் இருந்தோம்
இப்போது நானும்
என் மகனும்
இருப்பது போல ....

ஏதோ ஒரு
அற்ப காரணம்தான்..
ஆனால் தோழர்களே
அற்ப உயிர்களின்
காரணங்கள்
வேறெப்படி இருக்கும்?


மருத்துவரிடம் எதற்கு
நான்
என் கடனை
திருப்பிச்
செலுத்திக்
கொண்டிருக்கிறேன்
என்றேன்

அகண்டப் பெருவெளியில்
எங்கேனும் அலைந்து கொண்டிருந்தால்
அப்பாவுக்கும் இருக்கக் கூடும்
என்னிடம் சொல்ல
சில வார்த்தைகளேனும் ...
சொல்லிச் சிரிக்க
சில பழங்கதைகள்...

அவர் அப்பாவாகவும்
நான் மகனாகவும்
இருந்த
காலத்தில் நடந்த கதைகள்..
அவர் இறந்தவராகவும்
நான் இருப்பவனாகவும்
இல்லாத
அந்தக் காலத்தில்
- போகன்

பிளாஸ்டிக் புன்னகைகள்

1.அவளது
சாக்கரின் புன்னகை
மிதக்கும்
பிளாஸ்டிக் கண்களைத் தாண்டி
எப்படி
அவளை நேசிப்பது
என்பதுதான்
எனக்கு
இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை


2.எங்கிருந்தோ பறந்துவந்து
ஜன்னல் விளிம்பில்
அமர்ந்துகொண்ட
பட்டாம்பூச்சியை
குறைந்தது
பத்துப் பேராவது
கவிதை செய்திருக்கக் கூடும்
என்று நினைத்துக் கொண்டேன்
களங்கமின்மையின் பாவனைகளோடு
புகைப்படத்துக்கு
போஸ் தரும்
குழந்தை நடிகை போல
இது
ஒரு தொழில்முறைப் பட்டாம்பூச்சியாகவும் இருக்கக் கூடும் தானே?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

3.எப்படி இருக்கிறாய்
என்றவள் கேட்டதில்
இருக்கிறாயா
என்ற
கேள்வியும் இருந்ததா?

4நான் இல்லாவிட்டால்
இறந்துவிடுவேன்
என்றவளை
நேற்று தெருவில் பார்த்தேன்
கையில் சாத்திய குழந்தையோடு..
இறந்தபிறகு
பிறந்ததா இது?

5.நெடுநாட்களாய்
உன் குகையில் நீ இருந்தாய்
என் குகையில் நான் இருந்தேன்
ஒரு சலிப்பான காலையில்
ஒரே நேரத்தில்
தற்செயலாய் வெளியே வந்தோம்
காலைக் கதிரின
பொன் வெயில்
இருவர் மீதும் படர்ந்தது

அந்த
இனிப்புவெளிச்சம்
மற்றவரிடமிருந்தே வருகிறது
என்று தவறுதலாக நினைத்துக் கொண்டோம்...
காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் ...

- போகன்